பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக
சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக
செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூன் 23ம் தேதி
வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள்,
எம்.பி., எம்.எல்.ஏ க்கள். கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். இதனால், இந்த கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்பு அவசியம். எனவே, பொதுக் குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி கடந்த 7ஆம் தேதி டி.ஜி.பி. மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், அந்த மனு மீது முடிவு எதும் எடுக்காததால் மீண்டும் கடந்த 15ஆம் தேதி மனு
அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவும் மீது முடிவெடுக்காமல் காலம்
தாழ்த்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி சதீஷ்குமாரிடம்
முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார் இந்த மனு வரும்
புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
-ம.பவித்ரா