ராஜபாளையம் நகராட்சியில் அதிமுக வேட்பாளரின் கணவரை திமுகவினர் கடத்தியதாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராதிகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 42 வார்டுகளை கொண்டது.இந்தநகராட்சியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. 29வது வார்டில் அதிமுக சார்பில் ராதிகாவும், திமுக சார்பில் கீதாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக வேட்பாளர் ராதிகாவின் கணவர் ராஜேந்திரனிடம் திமுக வேட்பாளர் தரப்பில் வாபஸ் வாங்குமாறும் அதற்கு அதிமுக தரப்பு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ராதிகாவின் கணவர் ராஜேந்திரன் தான் அதிமுக தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இரவு 10 மணிக்கு மேல் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக வேட்பாளர் கீதா தரப்பினர் தனது கணவரைக் கடத்தி இருக்கலாம் எனக் கூறி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரின் கணவரை , திமுக வேட்பாளர்கள் தரப்பு கடத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு விருதுநகர் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







