நூறுநாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளை சேர்ப்பது தொடர்பாக ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்
தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி வீடு (ஆவாஸ் யோஜனா) கட்டும் திட்டத்தின் கீழ் எழக்கூடிய புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் மக்கள் குறைத்தீர்ப்பு மையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், பிரதமர் வீடு
கட்டும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசு 40
சதவிகிதமும் நிதி வழங்கி வந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு 38% நிதி மட்டுமே
வழங்குவதாக குறிப்பிட்டார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எழக்கூடிய
புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசு நிறைவேற்றிய சட்டமே கிடப்பில் போடப்படும் சூழலில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் விவசாய பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் சூழல் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், ஊரக வளர்ச்சித்துறைசார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.








