மத்திய அரசின் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு எதிரான அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவளிப்பதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் மதுரை சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவளிப்பதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அக்னிபாத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன். அவர்களுக்குத் துணைநிற்கிறேன். அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.
#அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! (1/3)https://t.co/kA7R75SZGK pic.twitter.com/dsunQ7NiF1
— சீமான் (@SeemanOfficial) June 21, 2022
இத்தோடு, ‘அக்னிபாத்’ திட்டத்துக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைகளுக்காகப் போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.