உலக பணக்காரர் எலான் மஸ்க் போட்ட ஒரு லைக்கால், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஏழரை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற சென்னையில் இயங்கி வரும் நிறுவனம் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே ட்ரோன் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் என்பவரால் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கருடா ஏரோஸ்பேஸ் குழுவினர், சிங்கப்பூரில் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மையத்தில் உள்ள, 1 லட்சத்து 22 ஆயிரம் சோலார் பேனல்களை பராமரிக்க, தங்களது ட்ரோன் பயன்படுத்தப்படுவதாக கூறினர்.
தங்களது ட்ரோன் மற்ற நிறுவன ட்ரோன்களைவிட குறைந்த அளவு தண்ணீரை பராமரிப்புக்கு பயன்படுத்துவது குறித்து, அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டதாகவும், அதற்கு, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் லைக் செய்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தனர்.
https://twitter.com/AgnishwarJ/status/1417297668276203521
இதனால், தங்களது நிறுவனத்தில் ஏழரைக் கோடி ரூபாய் முதலீடு செய்ய லண்டனைச் சேர்ந்த நிறுவனம், முன்வந்துள்ளதாக கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.







