அதானி குழுமத்துக்கு எதிரான வழக்கில், செபி முக்கியத் தகவல்களை மறைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதானி குழுமத்தின் மீது பங்குச் சந்தை மோசடி, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை 4 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்த போதிலும் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் கடும் வீழ்ச்சி கண்டு பங்குச் சந்தையை ஆட்டம் காண வைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் முதலீட்டாளர்கள் பலருக்கும் பெரும் இழப்பு உண்டானது. இந்நிலையில் அதானி குழுமத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டுமென சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் செபி சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், ”அதானி குழுமத்துக்கு எதிரான 24 விவகாரங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 2 விவகாரங்களை தவிர, மற்ற அனைத்து விவகாரங்கள் குறித்தும் விசாரணை நிறைவடைந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களின் உண்மையான உரிமையாளா்கள் குறித்த தகவல்கள், குறைந்த விகிதத்தில் வரி விதிக்கும் 5 நாடுகளிடம் இருந்து கிடைக்க வேண்டியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான அனாமிகா ஜெய்ஸ்வால் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவா், “கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய செபி தலைவருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்தக் கடிதத்தில், ’உண்மையான சந்தை விலைக்கு பதிலாக, அதிக விலைக்கு மின் கருவிகளை இறக்குமதி செய்ததாக கணக்குக் காட்டி மோசடியாக ஈட்டப்பட்ட பணம் மூலம், அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டு கொண்டிருக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.சந்தை விலைக்கு மாறாக, சரக்குகளை அதிக விலைக்கு வாங்கியதாக அதானி குழுமம் கணக்குக் காட்டிய குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் இருந்து முக்கியத் தகவல்களை செபி மறைத்துள்ளது. அத்துடன் டிஆர்ஐ அனுப்பிய எச்சரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் செபி அசட்டையாக இருந்துள்ளது.
உள் வர்த்தகம் போன்ற குற்றங்களைக் கவனிக்கும் செபியின் கார்ப்பரேட் நிர்வாக குழுவில் சிரில் ஷ்ராஃப் என்பவா் உறுப்பினராக இருந்துள்ளார். இவரின் மகள் அதானி குழும நிறுவனரான கெளதம் அதானியின் மருமகளாவார். இது அதானி குழுமத்துக்கு எதிரான செபியின் விசாரணையில் தெளிவான முரண்பாட்டை எடுத்துரைக்கிறது. பங்குச் சந்தை சார்ந்த ஒழுங்குமுறைகளில் அவ்வப்போது செபி கொண்டு வந்த திருத்தங்களால் அதானி குழுமத்துக்குப் பலன் கிடைத்துள்ளது. இந்தத் திருத்தங்கள் அதானி குழுமத்துக்கு கவசமாக இருந்துள்ளன. இதன்மூலம் அந்தக் குழுமத்தின் ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் மோசடிகள் கண்டறியப்படவில்லை.” இவ்வாறு அனாமிகா ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.