சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து
செய்யக் கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது
காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல் துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.
அவரது வாதத்தில், மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால்,
ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க
கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்
தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் உயிரை மாய்த்துக் கொள்ளதாகவும் காமராஜ் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக
இருந்தார் குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை
சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளார். தங்களுக்குள் எவ்விதப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு. அவரது உயிரிழப்பு தான் என்று தெரிவிக்கபட்டது. மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியவில்லை என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு அந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அவர்களுக்குத் தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் என்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும். சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக் கூடாது. உயிரை மாய்த்துக் கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான
வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால்
குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி
செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தில் விசாரணையை
எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா








