சரத்பாபுவின் உடலுக்கு தமிழ் திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி, சரத்பாபு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ஆறுதல் கூறினார்கள்.
பிரபல நடிகர் சரத்பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று ஹைதராபாத் ஃபிலிம் சேம்பரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இரவு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, இன்று (மே 23) காலை சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடல், தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சுஹாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சரத்பாபு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ஆறுதல் கூறினார்கள்.
அந்த வகையில், சரத்பாபு உடன் அண்ணாமலை, முத்து போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்த், நேரில் வந்து சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.