நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியைத் தொடக்கிவைக்க பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்தார். இதையடுத்து, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 22,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டன் வீட்டில் இருந்து நிகழ்ச்சி நடந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து மீண்டும் வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக சிறப்பு கான்வாய் காவல் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் ரவி அபிராம் உத்தரவின்பேரில், நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் மருது தலைமையிலான காவல் துறையினர் கான்வாய் மூலம் நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் இருந்து பத்திரமாக அழைத்துச் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி ஆய்வாளர் மருது மற்றும் காவலர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார். தொடர்ந்து, காவல் துறையினர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
-ம.பவித்ரா