மைசூரில் தனியார் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்ட நடிகர் பிரபாஸ் சிலை பாகுபலி திரைப்பட தயாரிப்பாளர் வலியுறுத்தலின் பேரில் அங்கிருந்து அகற்றப்பட உள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்திய அளவில் பேசப்பட்ட இப்படத்தின் பிரம்மாண்டம், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்தது. வசூலைக் குவித்த இப்படத்தில் அமரேந்திர பாகுபலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் நட்சத்திர நடிகராக உருமாறினார். அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பிற்காக, மைசூர் அருங்காட்சியத்தில் பாகுபலி தோற்ற பிரபாஸின் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா, “எங்களிடம் முன் அனுமதி பெறாமலேயே பாகுபலி சிலையை அருங்காட்சியத்தில் வைத்துள்ளனர். இதை அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ எனத் தெரிவித்திருந்தார். இதனால், அருங்காட்சியத்தின் உரிமையாளர் பாஸ்கர், “சிலையை ஒப்புதல் பெறாமல் வைத்ததற்காக தயாரிப்பாளர் அவருடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.
அதனால், சிலையை அகற்ற முடிவுசெய்துள்ளோம்” என பதிலளித்துள்ளார். இந்த தனியார் அருங்காட்சியத்தில் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார், விஷ்ணு வர்தன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பலரின் மெலுகு சிலை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.







