நடிகர் ஜெயம் ரவி, நடிகர் ஜெயராம் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன்கோவில் இன்று மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதால்
லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை
திறக்கப்பட்டது. அப்போது முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதும்.ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் சபரிமலையில் கூட்டத்தால் திணறி வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணியில் 3000போலிசார் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று மாலை நடக்கிறது. ஜோதி தரிசனத்தையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு ஐய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் ஜெயராம் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன்
ஆகியோர் சபரிமலைக்கு மாலையணிந்து சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு கொச்சி வந்தடைந்தனர்.
அங்கிருந்து பம்பைக்கு காரில் ஏறி பின்னர் சபரிமலைக்கு வந்தடைந்தனர். இதன் பின்னர் இவர்கள் மூவரும் தேவசம்போர்டு அதிகாரிகள் பாதுகாப்பில் 18 ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து சன்னிதானத்தில் தங்கி இன்று நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை பார்க்கவுள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை செல்லும் வழியில் நின்று கொண்டு படம் எடுத்து அத்துடன் “ சாமியே சரணம் ஐய்யப்பா… ஐய்யப்பனே உனை காண ஆவலுடன் வந்து கொண்டிருக்கோம்” என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.