மாற்றுத் திறனாளிகளின் விண்ணப்பங்கள் மீது ஒருமாத காலத்துக்குள் நடவடிக்கை – ஆவின் நிர்வாகம்

பாலகங்கள் அமைக்கக் கோரி மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது ஒருமாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர்…

பாலகங்கள் அமைக்கக் கோரி மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது ஒருமாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம் சாட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தை டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆவின் பால் முகவர் பணிக்கு விண்ணப்பித்ததற்காக விழுப்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் எட்டு முறை மரக்காணத்திற்கும், விழுப்புரத்திற்கும் ஆவின் நிறுவனத்தால் அலைக்கழிக்கப்பட்டதாலும், மாற்றுத் திறனாளிகளிடம் கையூட்டு பெரும் வகையில் அதிகாரிகளின் நடவடிக்கை இருப்பதாக குற்றம் சாட்டி போராட்டம் நடைபெற்றது.

ஆவின் இல்லத்தின் உள்ளே சென்று முற்றுகை போராட்டம் நடத்தியதால் ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தையில் டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தால் இனி அலைக்கழிக்கப்படக் கூடாது என்றும் ஆவின் நிறுவனங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு செய்து கொடுப்பதை உறுதி செய்யும் வகையில், அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், சுற்றறிக்கை அனுப்பும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

பின்னர், பால் வளத்துறை அமைச்சர் நாசர் காணொளி அழைப்பு வாயிலாக பேச்சுவார்த்தை மேற்கொண்டார். போராட்டத்திற்கான கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என உறுதியளித்ததோடு மாற்றுத் திறனாளிகள் இனி ஆவின் நிறுவனத்தால் எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் இனி எந்த ஒரு கோரிக்கையும் நேரடியாக என்னிடமே முறையிடலாம் என்றும் காணொளி அழைப்பின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர். போராட்டத்தை தொடர்ந்து அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலக வளாகங்களிலும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக அணுகக் கூடிய வகையில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக சீரமைக்கவும், மேம்படுத்தவும் வேண்டும் என நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பினார்.

மேலும், பாலகங்கள் அமைக்கக் கோரி மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்படும்
விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை வழங்கி விதிகளின்படி அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு ஒரு மாத காலத்திற்குள் அனுமதியோ அல்லது உரிய பதிலைத் தெரிவிக்க வேண்டும் என ஆவின் நிர்வாக இயக்குனர் – அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களின் பொது மேலாளருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.