பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகத்தில் பைக் ஓட்டி வீடியோ பதிவிட்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக டிடிஎப் வாசன் என்ற யூடியூபர் குறித்து சமூக வலைதளத்தில் பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. டிடிஎப் வாசன் சூப்பர் பைக்குகளை பயன்படுத்தி பயணம் செய்து பல்வேறு வீடியோக்களை தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். இவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பாக டிடிஎப் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் காவல்துறையால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து டிடிஎப் வாசனுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆயிரக்கணக்கான பேர் சந்திக்க முற்பட்ட நிகழ்வை டிடிஎப் வாசன் வீடியோவாக தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். யார் இந்த டிடிஎப் வாசன், இந்த வாலிபரை ஏன் ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர் என்று பலரும் வலைதளத்தில் தேட ஆரம்பித்தனர். இதையடுத்து இவரின் யூடியூப் வீடியோக்கள் பல கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அதிகம் பின் தொடரும் நபராக டிடிஎஃப் வாசன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனது ஆகட்டும் பார்த்துகிறலாம்! @tnpoliceoffl
TTF Vaasan is highly injurious to the Young Society! TN bike Vlog Youtube channels should be invigilated. 1/3 pic.twitter.com/t1TSxMkqjC— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) July 3, 2022
இந்நிலையில் டிடி எஃப் வாசன் சூப்பர் பைக்குகளை பயன்படுத்தி அதி வேகமாக செல்லும் காட்சி ஒன்றை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 247 கிலோமீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கும் அந்த வீடியோவை டேக் செய்து பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னை காவல் துறையில் சமூக வலைதள பக்கத்தை இணைத்து டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிவேகமாக செல்லும் வீடியோவையும் இணைத்து புகார் அளித்து வருகின்றனர். இது போன்ற வீடியோ பதிவினால் இளைஞர்கள் தவறான முன்னுதாரணம் எடுத்துக் கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டுவார்கள் என கருத்து பதிவிட்டுள்ளனர்.
பைக்கில் அதிவேகமாக செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை சமூக வலைதள பக்கத்தையும் இணைத்து புகார் அளித்துள்ளனர். எனவே டிடிஎஃப் வாசனையும் இவரை பின்பற்றி இதே போன்று அதிவேகமாக பைக்குகளை இயக்கி வீடியோ பதிவிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தையும், தமிழக காவல்துறை பக்கத்தையும் இணைத்து புகார் அளித்து வருகின்றனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல்துறை, இதுபோன்ற செயல்களை சென்னை மாநகரத்தில் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். மாணவர்களும், இளைஞர்களும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது. நீங்களும், உங்கள் பாதுகாப்பும் முக்கியம் எனவும் கூறியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதி சென்னை காவல்துறைக்கு உட்பட்டது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளித்துள்ளது.
ஏற்கனவே ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதன் என்ற யூடியூபர் தொடர்பாக சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசன் என்ற மற்றொரு யூடியூபர் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என சமூக வலைதளம் மூலம் பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.