ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, நேற்று ஒரே நாளில் சுமார் 100 கோடி ரூபாயை பத்திரப் பதிவுத் துறை ஈட்டியுள்ளது.
ஆடி மாதம் பதினெட்டாம் தினத்தில் காவிரியில் நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம். என்பது நம்பிக்கை. ஆடிப்பதினெட்டு காவேரி பூப் பெய்திய நாள் என்ற ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவதை தமிழர்கள் காலம், காலமாக கடை பிடித்து வருகிறார்கள்.
மேலும் புனித நாளாக கருதப்படும் ஆடி 18 ஆம் தேதி நிலம், வீடு வாங்கி பதிவு செய்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனையடுத்து நேற்று பத்திரவுப்பதிவு அலுவலகங்களில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதுதொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, சாா் பதிவாளர் அலுவலகங்களில் அதிக அளவு பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, ஆடிப்பெருக்கு தினமான வியாழக்கிழமை (ஆக.3) டோக்கன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு சாா் பதிவாளா் அலுவலகத்திலும் 100 டோக்கன்களுடன் கூடுதலாக 50 டோக்கன்களை சொத்து வாங்குவோா் பெற்றனா். இதனால், ஆவணம் பதிவு செய்ய விரும்பிய அனைவரும் டோக்கன்களை எந்தவித சிரமுமின்றி பெற்றனா். மேலும், பதிவுத் துறை ஆடிப் பெருக்கு தினத்தில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.





