ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” – தகுதியான பயனாளி விடுபடக் கூடாது!- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் …

ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று (7.7.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையாவது:

தமிழ்நாடு அரசினுடைய நிர்வாக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாடு வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை என்று சொல்லும் வகையிலான மாபெரும் திட்டத்தை தொடங்குவதற்கான முதற்கட்டக் கூட்டம் இது!

தலைமுறை தலைமுறைக்குப் பயனளிக்கப் போகிற இந்த மகத்தான திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டம் வகுப்பதற்காக நாம் கூடியிருக்கிறோம்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நோக்கத்துடன் செயல்படும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரு பொதுநோக்கு உண்டு. அதுதான் சமூகநீதி!

நீதிக்கட்சி காலம் தொடங்கி இன்றுவரை தமிழ்நாட்டை வழி நடத்தும் கோட்பாடுதான், சமூகநீதி! இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட அரசையும், அதன்மூலம் பல புதுமையான, புரட்சிகரமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு.

சமூக அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்ததுதான் சமூகநீதி!

சாதிய ஏற்றத்தாழ்வு கொண்ட ரத்த பேதமும், ஆண் பெண் வேறுபாட்டை விதைக்கும் பால் பேதமும், இந்தியாவின் சமூக வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகளாக காலம் காலமாக இருக்கிறது. வரலாற்றின் முந்தையப் பக்கங்களில் பதிவான பிற்போக்குச் சிந்தனைகளால் – செயல்களால் தமிழ்ச் சமுதாயம் பெரிதளவு பாதிப்புக்குள்ளாகி இருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த பாதிப்பு சாதிரீதியான, மதரீதியான வேறுபாட்டை மட்டுமல்ல, சமூகத்தின் சரிபங்காகத் திகழும் மகளிரின் வாழ்க்கைத் தரத்தையும், அடையாளத்தையும், சுயமரியாதையையும் எந்த அளவிற்கு பாதித்தது என்பதை நான் இங்கு அதிகமாக விளக்கத் தேவையில்லை.

தொடக்க காலத்திலிருந்தே தாய்வழிச் சமூக முறைதான், மனிதகுலத்தை வழிநடத்தி வந்திருக்கிறது. உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறிய போதுகூட, பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமைவாதக் கருத்துக்களாலும், பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதார விடுதலையை மீட்க எத்தனையோ சமூகச் சீர்திருத்தவாதிகள் பணியாற்றினார்கள்.

“மேட்டுக்குடியைச் சேர்ந்த ஒருவன், ஏழையை அடித்தால் நான் ஏழையின் பக்கம் நிற்பேன். ஏழை ஒருவன் தனது வீட்டில் தனது மனைவியை அடித்தால், அவன் மனைவி பக்கமாக நிற்பேன். யார் பக்கம் நிற்கிறேன் என்பதே எனது நிலைப்பாடு” என்று சொன்ன தந்தை பெரியார், இந்த நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையை விதைத்தார்.

அதனை அண்ணாவும், கருணாநிதியும் அரசின் திட்டங்களாகச் செயல்படுத்திக் கொடுத்தார்கள். இதன் விளைவுதான், இன்று பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் மாணவிகள் அதிகம் பயின்று கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.

அரசுப் பணியாளர் தேர்வுகளில் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழ்ச் சமூகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. குறிப்பாக, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டும் என்று 1929-ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநி சட்டமாக்கினார். இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை. இதுதான் ‘திராவிட மாடல்’!

➢ கருணாநி ஆட்சிக்காலத்தில் 1973-ஆம் ஆண்டு ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வந்த காவல்துறையில், பெண்களுக்கும் பணிப்பொறுப்புகள் வழங்கப்பட்டன.

➢ பெண்களுக்கு அனைத்து அரசுப் பணிகளிலும் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

➢ மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, உள்ளாட்சி அமைப்புகளே அடிப்படை என்பதை நன்கு உணர்ந்த கருணாநி, நாட்டிலேயே முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கினார்கள்.

➢ ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கினார்.

➢ ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரிவரை இலவசக் கல்வியும் வழங்கியதும் அவரே!

➢ ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்ததும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

➢ அதோடு மட்டுமல்லாமல், டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் தருமாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம் என எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்த அரசு கருணாநி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களை எல்லாம், மகளிர் நலனையும், அவர்களது மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு செயல்படுத்திக்காட்டிய கருணாநிதியுடைய அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையிலும், அவரது நூற்றாண்டு விழாவிற்கு மேலும், மேலும் பெருமை சேர்க்கும் விதத்திலும், இந்த மகத்தான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என கருதி, நமது அரசு இந்தத் திட்டத்திற்கு கருணாநி பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதுதான், நான் போட்ட முதல் கையெழுத்து!

அதுவரை 40 விழுக்காடாக இருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை, இப்போது 61 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக, பெண்களுக்கான அன்றாடச் செலவுகள் பெருமளவு குறைந்துள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் – காய்கறி – பூ – மீன் எனச் சிறு வியாபாரங்களுக்குச் செல்லும் தாய்மார்கள் – வேளாண் தொழில்களுக்குச் செல்லும் சகோதரிகள் – கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள் – உற்றார் உறவினர்களைச் சந்திக்கச் செல்லும் பெண்கள் எல்லாம் – இந்தத் திட்டத்தால் இன்று பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி எண்ணற்ற திட்டங்களை மகளிருக்காக நாம் செயல்படுத்தி வந்தாலும், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி.

இதற்கு முக்கிய காரணமாக, பெண்களின் பொருளாதார நிலைமையும், கல்வி நிலையுமே காரணமாக அமைந்திருக்கிறது. இந்த இரு காரணங்களில் முன்னேற்றம் காணாமல் சமூகத்திலும், குடும்பங்களிலும் மகளிர் உரிய அங்கீகாரம் பெற இயலாது.

இதற்காகத்தான் நமது அரசு பெண்களின் உயர்கல்வியினை இடைவெளியின்றி தொடர்ந்து பயில உதவும் வகையில், உயர்கல்வியினை நிறைவு செய்யும் காலம் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் “புதுமைப்பெண்” என்ற முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தி அதன்மூலம் மாதந்தோறும் ஏறக்குறைய இரண்டு லட்சம் மாணவியர் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை மாதம் தோறும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இல்லறப் பொறுப்புகளுடன் பணிகளுக்குச் சென்று, அதன்மூலம் தங்கள் குடும்பங்களின் உயர்வுக்கு உழைத்து வரும் மகளிரின் உழைப்பை முறையாக அங்கீகரிக்க வேண்டும்.

இதனைக் கருத்தில்கொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம். சொன்னதைச் செய்யத் தொடங்கிவிட்டதன் அடையாளம்தான் இந்தக் கூட்டம்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, “தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் நிலைபெறவுள்ள, ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத் தொகை” என்ற திட்டத்தை அறிவித்தேன்.

மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்தின் மூலம், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், வயல் வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரேநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய விளிம்பு நிலையில் வாழும் பெண்கள் என பல்வேறு வகையில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள்.

இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக
2023-2024–ஆம் ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய நாள் இந்தத் திட்டத்தைச் சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொரு துறைகளின் பங்களிப்பு குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகள் குறித்தும் உங்கள் அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தலைமைச் செயலகத்தில் ஆற்றவேண்டிய பணிகளான, அரசாணை வெளியிடுதல், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் என்று எடுத்துச்சொல்லப்பட்ட ஒவ்வொரு துறைகளுக்கான பங்களிப்பினையும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய முறையில் செயல்படுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தினை வெற்றிகரமான ஒரு திட்டமாகச் செயல்படுத்திக் காட்டுவதில், மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய உங்களின் பங்கு முக்கியமானது.

இந்தத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று தொடங்கப்படவுள்ளது. இன்னும் 2 மாத காலமே உள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதனை தங்களது தலையாய பணியாகக் கொண்டு, கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு, திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில், இத்திட்டத்திற்கென வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய பயனாளிகளைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற கிட்டத்தட்ட ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பங்களைப் பெற பொது விநியோகக் கடை தோறும் சிறப்பு முகாம்களை நீங்கள் நடத்திட வேண்டும். இம்முகாம்களில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நீங்கள் செய்திடவேண்டும்.

சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, இந்த மகளிர் உதவித் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும்.

தலைமைச் செயலாளர் அவர்களது தலைமையில் மாநில அளவில் இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் ஏற்படுத்தப்படவுள்ள மாநிலக் கண்காணிப்புக்குழு, தேவைப்படும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மகத்தான திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள மகளிரின் சமூகப் பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
கருணாநி வழியில் செயல்படும் நமது அரசு, மகளிர் வாழ்வில் என்றென்றும் ஒளியேற்றிடும் விளக்காக அமையும் என இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சிறந்த, உன்னதமான, முன்னோடித் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டை ஒன்றிய அளவில் மட்டுமல்ல – உலக அளவிலும் முதல் மாநிலமாக மாற்றிடுவோம் – அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை அறிவிப்பது எளிது. செயல்படுத்துவது கடினம். முறையாகத் திட்டமிட்டால் செயல்படுத்துவதும் எளிதாகும். என்ன செய்கிறோம் என்பதற்கு இணையானது எப்படிச் செய்கிறோம் என்பதாகும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற உன்னதமான திட்டத்தை எந்த விதமான புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தொடங்கி அலுவலர்கள் வரை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவையாக இருந்தாலோ, சந்தேகம் இருந்தாலோ, முதலமைச்சர் அலுவலகத்தையோ, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ள அமைச்சர் உதயநிதியையோ அல்லது என்னையோ கூட எந்த நேரமானாலும் தொடர்புகொள்ளுங்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை! அதனை மனதில் வைத்து அனைவரும் அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டு விடை பெறுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.