கன்னியாகுமரியிலிருந்து ஸ்கேட்டிங் பயணத்தைத் துவங்கிய திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் காஷ்மீரில் தனது பயணத்தை நிறைவு செய்வதற்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறு மூடு பகுதியைச் சார்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் முதலில் டெக்னோ பார்க்கில் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு தனியார்ப் பள்ளியிலும் பணிபுரிந்துள்ளார். அனஸ் ஹஜாஸ் ஸ்கேட்டிங் மீதுள்ள அடங்காத ஆவலால் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். ஸ்கேட்டிங்கில் பல சாகசங்கள் செய்து பரிசுகளையும் குவித்துள்ளார், புதிதாகச் சாதிக்க வேண்டும் என எண்ணிய அவர், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகச் சாகசம் பயணம் மேற்கொள்ள முடிவு செய்து இதற்காகக் கடந்த மே மாதம் 29-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ஸ்கேட்டிங் சாகச பயணத்தைத் துவங்கினார்.
மதுரை, பெங்களூர், ஹைதராபாத் வழியாகப் பயணித்தவர் மத்தியப் பிரதேசம் உத்திர பிரதேசத்தைக் கடந்து ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளார். இன்னும் சுமார் 15 நாட்களில் காஷ்மீர் சென்று தனது சாகச பயணத்தை நிறைவு செய்ய இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் லாரி ஒன்று மோதிய விபத்தில் மரணம் அடைந்துள்ளார். அனஸ் ஹஜாஸ் செல்போனுக்கு நண்பர் ஒருவர் அழைத்த போது எதிர்முனையில் பேசியவர் இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்சகுதா பகுதியில் விபத்தில் சிக்கியதாகவும் அவரை அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் தகவல் தெரியவந்தது.
அனஸ் ஹாஜாஸின் உடலைப் பெறுவதற்காக அவரது பெற்றோர்கள் ஹரியானா சென்றுள்ளனர். முக்கிய நிகழ்வுகள் குறித்தும் தான் கடந்து சென்ற இடங்கள் குறித்தும் முகநூலில் வீடியோ பதிவிட்டு வந்த அனஸ். குமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பயணத்தை முடித்து சாதனை படைக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அனசை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்ந்தவர்களுக்கும், ஸ்கேட்டிங் ஆர்வலர்களுக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








