மூளைபுற்று நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனை அதிநவீன
சிகிச்சை முறையால் குணப்படுத்தி, தஞ்சை மருத்துவக்கல்லூரி
மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அரியலூர், ஜெயங்கொண்டம் தாலுகா ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்தவர்
பிரசாத் என்பவரது 4 வயது மகனுக்கு மூளையில் புற்று நோய் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் மூளை பகுதிக்கு அருகில் கட்டி இருந்ததால் முழுமையாக அகற்றப்படவில்லை.
இதனால், மேற்சிகிச்சைக்காக சிறுவனை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்ததில் அதில் பாதி புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவனின் மூளையில் உள்ள கட்டியை முழுமையாக அகற்றுவது குறித்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில், புற்றுநோய் கதிரியக்கம் பேராசிரியர் விஜயகுமார் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது எஸ்.ஆர்.டி என்ற அதிநவீன சிகிச்சை முறை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, புற்றுநோய் கதிரியக்க மருத்துவர் தலைமையில், மருத்துவ குழு,
மருத்துவ கல்லூரியில் புற்று நோய் கதிர்வீச்சு துறையில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ
நேரியல் முடுக்கி, உள் கதிரியக்கம், டெலிகோபால்ட் ஆகியவை மூலம் சிகிச்சை அளிக்க தொடங்கினர்.
இந்த சிகிச்சை முறையானது மிக நுண்ணியமாக புற்றுநோய் கட்டியை மட்டும்
அழிக்கக் கூடியது. மருத்துவர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் மிக நுண்ணியமாக கம்ப்யூட்டரில் சிகிச்சை முறையை திட்டமிட்டு செய்ததில், சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. தற்போது சிறுவன் நலமுடன் உள்ளார்.
மேலும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் புற்று நோய் சிகிச்சைக்காக, 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில், சுமார் ரூபாய் 3 முதல் 5 லட்சம் வரை செலவாகும். ஆனால், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நவீன தொழில்நுட்ப முறையானது ஐந்து நாட்கள் மட்டுமே கதிர்வீச்சு சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும், முக்கியமான கண், இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்காத முறையில், சிகிச்சை செய்யக்கூடியது.
கு. பாலமுருகன்







