சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில், அதிகாலை நேரத்தில் சாலையில் சிறுத்தை உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை திம்பம் மலைப்பாதை 25-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை, தடுப்பு சுவரில் சிறிது தூரம் நடந்து சென்று பின்னர் அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது. இந்த வீடியோ காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும், திம்பம் மலைப்பாதை வழியாக அதிகாலை நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர். அதிகாலை நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.







