கடலூரில் பூரான் கிடந்த பிரியாணியை சாப்பிட்ட குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரைச் சேர்ந்தவர் ராஜா. கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கு இரண்டு மகள்களும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகள் மூன்று பேரும் தங்கள் தந்தையிடம் ஆசையாக பிரியாணி கேட்டதையடுத்து, ராஜா தனது 3 குழந்தைகளுக்கும் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். பின்னர் அதனை தனது குழந்தைகளுக்கு அவரே ஆசையாய் ஊட்டிய போது பிரயாணியில் பூரான் கிடந்துள்ளது. பாதிப் பூரானை குழந்தை அஜய் கிருஷ்ணா விழுங்கிய நிலையில் மீதியை தட்டில் துப்பியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை ராஜா, உடனடியாக பூரான் கிடந்த பிரியாணியுடன் குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ஜேம்ஸ் லிசா







