மதுரை திருமங்கலம் அருகே கி.பி 9, 13 மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வில்லூரில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் து.முனீஸ்வரன் தலைமையில் மேற்பரப்பு கள ஆய்வு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேளாண்மையில் செழிப்பான பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று மடை அமைந்துள்ளது. இதில் முதல் மடை சுவற்றில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது மடையில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால் சொற்களின் பொருள் அறிய முடியவில்லை.
மூன்றாவது மடையில் வலது புற சுவரின் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டில் சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன் என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டினை படியெடுத்து ஆய்வு செய்தபோது எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும் என பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.