சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும்…

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துபாயில் இருந்து விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின் விமானத்திற்குள் ஏறிய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

விமான இருக்கைக்கு அடியில் சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், விமான கழிவறையில் சோதனை செய்தனர். அப்போது கழிவறையில் இருந்த பெட்டிக்குள் மர்ம பார்சல் இருந்ததைக் கண்டனர். அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதேபோல, பன்னாட்டு முனைய வருகை பகுதியில் உள்ள கழிவறையிலும் ஒரு மர்ம பார்சலை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்த போது அதில் தங்கம் இருந்ததைக் கண்டனர்.

ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் விமான கழிவறையில் இருந்து ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் துபாயில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த கும்பல் விமான கழிவறை மற்றும் விமான நிலைய கழிவறையில் போட்டுச் சென்றதாக தெரிகிறது.

இதுதொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை கடத்தி வந்தது யார்? கழிவறையில் போட்டு சென்றது யார்? கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.