எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக க் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திருகோணமலை சிறையில் அடைத்தனர்.
மீனவர்களின் வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பயாஸ் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமான மூலம் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ம.பவித்ரா








