இந்தியாவில் 5ஜி சேவைகளை குறுகிய காலத்தில் 80 சதவீதம் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதால், அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் குறுகிய காலத்தில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80 சதவீதம் விரிவுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். 5G சேவையின் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்றும், பல நாடுகள் 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை விரிவுப்படுத்த பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டன. ஆனால், இந்தியாவில் 80 சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம், அதிவேக 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத்தில் இந்தியா உள்ளது. மேலும் இது தொடர்பாக ஆகஸ்ட் மாதத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என கூறப்படுகிறது.
இதனிடையே, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பல முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு தீபாவளிக்குள் அதிவேக 5G தொலைத்தொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்கள், தாலுகாக்கள் மற்றும் தாலுகாக்களுக்கு அதன் 5G நெட்வொர்க்கை விரிவுபடுத்த உத்தேசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த இணைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 5G சேவையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2G மற்றும் 3G இன் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகக் குறையும் என்றும் மொபைல் தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-இரா.நம்பிராஜன்







