செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம்…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இன்று (21.06.2022) காலை 8.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.48 அடியாகவும், கொள்ளளவு 3,500 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 550 கன அடியாக உள்ளது.

தற்போது தென்மேற்குப் பருவ மழை காலத்தில் கடந்த சில நாட்காளாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 500 கன அடி உபரி நீர் இன்று முதல்கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள்  எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.