சந்தைகளில் விற்பனையாகும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட சானிடைசர்கள் தரமற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
எந்த ஒன்றையும், அதன் பின்னணி என்ன என்று தெரியாமல் நம்புகிறவர்கள், சமூகத்தில் அதிகம். அப்படி கொரோனா காலத்தில் கண்மூடித்தனமாக நம்பப்பட்ட ஒன்று சானிடை சர்கள். மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் பொதுவெளியில் சானிடைசர் பயன்படுத்தும் பெரும்பாலோரின் எண்ணம், கொரோனாவிடம் இருந்து தப்பித்துவிட்டோம் என்பதாகவே இருக்கிறது.
ஆனால், நாம் பயன்படுத்தும் சானிடைசர்கள், கொரோனாவுக்கு எதிராக முழுமையாக செயல்படுகிறதா, அவை நம் உடலுக்கு உகந்ததா? பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்குமா? என்றெல்லாம் கேட்டால், பதில் இருக்காது.
இந்த நிலையில், உத்தரகாண்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ஷாக் கொடுத்திருக்கிறது. நாம் பயன்படுத்தும் சானிடைசர்களில் 56% தரமற்றவை என்றும், கொரோனாவுக்கு எதிராக முழுமையாக செயல்படுவதில்லை என்பதுதான் அந்த ஷாக்!
இந்த ஆய்வுக்கு, 50 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 1,050 சானிடைசர் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 56 சதவீதம், அதாவது 578 மாதிரிகள் தரமற்ற வை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தரமற்ற சானிடைசர்களில் மெத்தனால் உள்ளிட்ட தேவையற்ற வேதிப்பொருட்கள் சேர்ப்பதும் தெரியவந்துள்ளது. தரமற்ற சானிடைசர் மாதிரிகளில் 10 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆல்கஹால் அளவு உள்ளது.
ஆல்கஹால் குறைவாக உள்ள சானிடைசர்கள், கைகளில் உள்ள கிருமியின் வளர்ச்சியை தடுக்குமே தவிர, அழிக்காது என்று கூறுகின்றன ஆய்வுகள். சந்தைகளில் போலிகளின் விற்பனை அதிகரித்துள்ளதால், தரமான சானிடைசர்களை தேர்வு செய்து பயன்படுத்துவது அவசியமாகியுள்ளது.
இதையெல்லாம் கவனிங்க!
சானிடைசர்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை எவை என்பது குறித்து பார்க்கலாம்.
60 முதல் 95 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும் சானிடைசர்களே கிருமிகளைக் கொல்லும் திறன் கொண்டவை. இதனால், சானிடைசர்களில் எத்தனால் அளவு நிச்சயமாக 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஆல்கஹால் கைகளை உலரச் செய்வதால், கிளிசரின் சேர்க்கப்பட்ட சானிடைசர்கள் தோலுக்கு உகந்ததாக இருக்கும். தோலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் மெத்தனால் உள்ள சானிடைசர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மேலும், நறுமணம் இல்லாத சானிடைசர்களை பயன்படுத்துவதே சிறந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது தேவைகளைப் பொறுத்து போலிகளும் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையுடன் சானிடைசர்கள் வாங்குவது அவசியமாகி உள்ளது. கொரோனா சூழலை பயன்படுத்தி தரமற்ற சானிடைசர்கள் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.






