10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அடங்கிய Blue print-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, புதிய அட்டவணையின் படி, பாடம் நடத்தி, அவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.







