தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
2020இல் 4,338 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை,
39.8 சதவீதம் அதிகரித்து, 2021 ஆம் ஆண்டில் 6,064 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4,465 வழக்குகள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்(போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளவை.
இந்த எண்ணிக்கை நாட்டிலேயே நான்காவதாகும். இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளும் உறுதி செய்துள்ளன. கடந்த ஆண்டில் தமிழகத்தில் 69 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இதில் 3 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பெண் குழந்தைகளுக்கு
எதிராக 768 குற்றங்கள் பதிவாகி உள்ளன. சென்னையில், 2020ல் 306ஆக இருந்த
வழக்குகளின் எண்ணிக்கை, 2021ல் 546 வழக்குகளாக (435 போக்ஸோ வழக்குகள் உட்பட)
உயர்ந்துள்ளது.
இதனிடையே, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள விபத்து இறப்புகள்
மற்றும் உயிரிழப்புகள் (ADSI – Accidental Deaths and Suicides) அறிக்கையின்படி,
கடந்த ஆண்டை விட நாட்டில் உயிரிழப்புகள் 7.2% அதிகரித்துள்ள நிலையில், நாட்டிலேயே
தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
22,207 உயிரிழப்பு வழக்குகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 18,925 உயிரிழப்புகள் பதிவாகி 2-ம் இடத்தில் உள்ளது.

பெருநகரங்களைப் பொறுத்தவரை உயிரிழப்புகளில் சென்னை 2-வது ஆக இருக்கிறது.
டெல்லியில் 2,760 வழக்குகளும், சென்னையில் 2,699 உயிரிழப்பு வழக்குகளும்
பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 16,883 உயிரிழப்புகளும்,
சென்னையில் 2,430 வழக்குகளும் பதிவாகியுள்ளன. குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொண்டதாக நாட்டில் பதிவான 131 வழக்குகளில், 33 உயிரிழப்புகளுடன்
தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது உயிரிழப்பு விகிதம் 24.7% ஆக உள்ளது. இது 2020 இல் 22.2%
ஆகவும், 2019 இல் 17.8% ஆகவும் இருந்தது. குடும்பப் பிரச்னைகள், மனநோய்,
நீண்டகால நோய் மற்றும் திருமணப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல காரணங்களால்
உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது.







