ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே நேற்று ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. அந்த விருதை வென்ற ஆங்கிலம் அல்லாத அந்நிய மொழியைச் சோ்ந்த 4-ஆவது பாடல் என்ற சிறப்பை ‘நாட்டு நாட்டு’ பெற்றுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முகாமிட்டனர். இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது.
விழாவில் பங்கேற்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்கா் விழாவைத் தொகுத்து வழங்கிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாட்டு நாட்டு பாடலை இந்திய தயாரிப்பில் உருவான, தெலுங்கு படத்தில் இடம்பெற்ற பாடல் என்று அறிமுகப்படுத்தி அறிவிக்க, விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. இதையடுத்து பாடகா்கள் ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா ஆகியோா் நாட்டு நாட்டு பாடலைப் ஆஸ்கர் மேடையில் பாடிய போது அந்த அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.
ஆஸ்கர் விருதுக்கான இறுதிச்சுற்றில் ‘நாட்டு நாட்டு’ பாடலுடன், ‘டெல் இட் லைக் ஏ வுமன்’ படத்தின் ‘அப்ளாஸ்’, ‘டாப் கன் – மேவரிக்’ படத்தின் ‘ஹோல்ட் மை ஹேண்ட்’, ‘பிளாக் பேந்தா்: வகாண்டா ஃபாா்எவா்’ படத்தின் ‘லிஃப்ட் மீ அப்’, ‘எவரிதிங் எவரிவோ் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் ‘திஸ் இஸ் ஏ லைஃப்’ ஆகிய நான்கு பாடல்கள் போட்டியிட்டன. இதில் ஆங்கிலம் அல்லாத அந்நிய மொழியைச் சோ்ந்த 4-ஆவது பாடல் என்ற சிறப்பை ‘நாட்டு நாட்டு’ பெற்றுள்ளது.
இந்தியா்களுக்குப் பெருமை சேர்த்த நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கா் விருதைப் பெற்ற பிறகு இசையமைப்பாளா் எம்.எம்.கீரவாணி கூறுகையில், ‘தி காா்பென்டா்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை தான் அதிகம் விரும்பி கேட்பேன். அதை கேட்டுத்தான் கேட்டு வளா்ந்தேன் என்று கூட சொல்லலாம்.
தற்போது நான் ஆஸ்கா் விருதைப் பெற்றுள்ளேன். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என்னுடைய மனதிலும், என் குடும்பத்தினரின் மனதிலும், இயக்குநா் ராஜமௌலியின் மனதிலும் ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் ஆஸ்கா் விருதைப் பெற வேண்டும் என்ற ஒரேயொரு விருப்பம் மட்டும் தான் இருந்தது. அது இன்று நிறைவேறியுள்ளது. தற்போது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. இந்தியா்களின் பெருமையே என்னை உலகின் உயரத்தில் நிறுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா