ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சூடு – ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அடிக்கடி…

ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அடிக்கடி ஆயுதமேந்திய கும்பல் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  அங்கு தற்கொலைப்படை தாக்குதல்,  துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும் அங்கு தொடர் தாக்குதல்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.  இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் சென்று வருகின்றனர்.  இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் நேற்று துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த தாக்குதலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 7க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி கூறுகையில்,  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.