பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட மற்றும் கட்டட அனுமதிக்கு மாறாக விதி மீறி கட்டப்பட்ட 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் அந்த அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீற கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்
அதனடிப்படையில் 15 மண்டலங்களிலும் 25-07-2022 முதல் 20-08-2022 வரை சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டத்தில் அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கடட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 2665 கட்டுமான இடங்களின் உரிமையாளர்களுக்கு கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதி மீறல்களை திருத்திக் கொள்ளாத 2403 கட்டிட உரிமையாளர்களுக்கு சம்பந்தபட்ட கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 39 கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டடங்கள் நாள்தோறும் மாநகராட்சி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறும் கட்டடங்கள் மீது மூடி சீல் வைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







