கோவை மாவட்டம் சூலூர் பகுதிகளில் திடீரென வீசிய சூறைக்காற்றுக்கு, ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேருடன் சாய்ந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் தாலூகா சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வதம்பச்சேரி செஞ்சேரிபுத்தூர், ஜல்லிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி நடந்து வருகிறது.
இந்திலையில், நேற்று முன்தினம் திடீரென வீசிய சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சின்ன வதம்பச்சேரியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் கூறுகையில், 12 ஏக்கரில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளதாகவும், இதற்காக கடந்த ஏழு மாதங்களில் ரூபாய் 25 லட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில், இரவு திடீரென வீசிய சூறைக்காற்றுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்ய தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் வேருடன் சாய்ந்து கடுமையான இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகவும் தெறிவித்தார்.
இதேபோல் ஏரளமான விவசாயிகளுக்கும் இந்த சூரைக்காற்றால் பாதிப்பிற்கு உள்ளாகி, சுமார் 15 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்பதால், தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: