மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தை புதுபிக்க ரூ.2 கோடி – முதலமைச்சரிடம் உறுதியளித்த முதியவர் ராஜேந்திரன்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தை புதுபிக்க 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக மதுரையை சேர்ந்த கல்விக் கொடையாளர் ராஜேந்திரன் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்தார். மதுரை தத்தனரி பகுதியில் அப்பளம்,…

மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தை புதுபிக்க 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக மதுரையை சேர்ந்த கல்விக் கொடையாளர் ராஜேந்திரன் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்தார்.

மதுரை தத்தனரி பகுதியில் அப்பளம், வற்றல் வியாபாரம் செய்து வரும் 86 வயது முதியவர் ராஜேந்திரன், கடந்த 2018ம் ஆண்டு ரூ.1.10 கோடியில் திரு.வி.க. மாநகராட்சி பள்ளிக்குப் 10 புதிய வகுப்பறைகள், இறைவணக்கக் கூடம் உள்ளிட்டவற்றைக் கட்டிக் கொடுத்துள்ளார். அண்மையில் கைலாசபுரம் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.71.45 லட்சத்தில் 4 வகுப்பறைகள், கழிப்பறை, உணவுக்கூடம் ஆகியவற்றை கட்டிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை அழைத்து கௌரவப்படுத்தினார்.

அப்போது, மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருவதற்காகவும் தனது வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜேந்திரனுக்கு சால்வை அணிவித்து, அவருக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதிஉதவி வழங்குவதாக அப்பள வியாபாரி ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார். இதனை கேட்ட முதலமைச்சர் சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் உங்களது பணி சிறக்கட்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அப்பள வியாபாரி ராஜேந்திரனை சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில், பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளில் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி. அவர் போன்ற மனிதர்களோடு உறவாடும் நேரங்களில் காலம் சற்றே உறைந்து நிற்காதா என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.