தமிழகம் முழுவதும் 33-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில், லட்சக்கணக்கில் பணம் மற்றும் மதுபானம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்வாரியம், போக்குவரத்து துறை, பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு துறை, வணிகவரித்துறை அலுவலகம், காவல்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் வராத 18 லட்சத்து 20 ஆயிரம் பணம், ஆறரை லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில் மற்றும் 36 ஆயிரம் மதிப்பிலான பட்டாசு பெட்டிகள் சிக்கியுள்ளது.
தீபாவளி இனமாக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து அரசு அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவிக்கிறனர்.
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும், அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சார் பதிவாளர்கள் சுமதி, உமாசங்கரி மற்றும் இணை சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரத்து 140-ஐ பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்பது சோதனை முடிவடைந்த பின்னரே தெரிவிக்க முடியும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.







