தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை… படகோட்டிக்கு ரூ.25 லட்சம் அபராதம் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

காரைக்கால் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

காரைக்கால் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி, மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 12 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்த வழக்கில் இருந்து கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. விடுதலையைத் தொடர்ந்து இலங்கை கடற்படை, ரோந்து கப்பல் மீது மோதி சேதப்படுத்திய வழக்கில் 12 மீனவர்களையும் மீண்டும் கைது செய்தது.

சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், இன்று 12 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் விடுவித்த நீதிபதி, படகோட்டிக்கு 25 லட்ச ரூபாய் அபதாரம் விதித்து உத்தரவிட்டார். அபாராதத் தொகையை கட்ட தவறும் பட்சத்தில், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை அடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள், இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.