பேருந்தும் டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தை அடுத்து, தீபற்றியதால் 12 பேர் உடல் கருகி உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தில் உள்ளது பலோட்ரா நகர். அங்கிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 25 பயணிகள் இருந்தனர். பார்மர் -ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பச்பட்ரா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே, டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில், நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. மோதிய வேகத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், பேருந்தில் இருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், தீயை அணைத்து படுகாயமடைந்தவர் களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மீட்பு மற்றும் உடனடி நிவாரணப் பணிகளுக் காக ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த விபத்தை அடுத்து அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து நடந்தபோது பேருந்தில் பயணித்த ஒருவர் கூறும்போது, ’டேங்கர் லாரி வேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு பேருந்து தீப் பிடித்தது என்றார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.