தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி தினகரன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே காவல்துறை ஐஜி சுமித் சரண், சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ஆயுதப்படை டிஐஜி கயல்விழி, காவலர் பயிற்சி மைய டிஐஜி ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ராணிப்பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் சிபிசிஐடிக்கும், சைபர் பிரிவு கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பரங்கிமலை துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.