“12 எம்.பிக்களின் சஸ்பெண்ட் ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் செயல்” – திருமாவளவன் எம்.பி

மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் செயல் என மக்களவை உறுப்பினரும், விசிக தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது…

மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் செயல் என மக்களவை உறுப்பினரும், விசிக தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க குரல் எழுப்புவோம் என்பதாலும், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற கோருவோம் என்பதாலும், அந்த விவகாரத்தை மடைமாற்றம் செய்யவே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தேசிய வங்கிகளை தனியார் மயமாக்கல் கூடாது என்பதை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வலிறுத்தினோம். IOB வங்கி தனியார் மயமாக்கப்பட்ட உள்ளது என்ற தகவல் மக்களிடம் பரவி உள்ளது, இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை கேட்டோம், மேலும் அது போன்ற திட்டம் இருந்தால் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தின் கனமழை காரணமாக பெரும் சேதங்களை ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக மாநில அரசு கோரிய போதிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தாகவும், எந்த தேக்கமும் இல்லாமல் நிதி வழங்கபடும் நிதி அமைச்சர் தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறினார்.

சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பாக விளக்கம் அளித்த திருமாவளவன், அடிமைப்படுத்தல் போன்ற மனநிலை எனக்கு இல்லை என்பது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும் என்றும் கட்சி தொண்டர்களுடன் நல்ல உறவு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதனையெல்லாம் விட்டுவிட்டு கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்யும் எங்களை திட்டமிட்டு அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள் நான் தங்கியுள்ளது என் வீடு அல்ல, அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம், ஒவ்வொரு மழையின் போது மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து தேங்கும் சூழல் உள்ளது அத்தகைய சமயங்களில் கூட நான் என் தொண்டர்களை விட்டு அங்கிருந்து சென்றதில்லை.

மேலும், அன்றைய தினம் டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன், அதுவும் இணைக்கப்பட்ட தொடர் நாற்காலி ஆகும், அப்போது என்னை கீழே விழாமல் என் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள்.

அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் எனக்கு இல்லை, டெல்லிக்கு அவசர அவசரமாக கிளம்பியபோது புதிய உடை அணியவோ, ஷூவை கழற்றவோ முடியாத சூழல்,
விமானத்துக்கு தாமதம் ஆகும் என்பதால் அவசரமாக புறப்பட்டேன், அப்போது தண்ணீரில் படாமல் நாற்காலி மீது நடந்தேன், நான் விழாமல் என் தொண்டர்கள் பார்த்து கொண்டனரே தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.