கடலூர் அருகே பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பரமேஸ்வரி. அறிவழகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கோயில் திருவிழாவுக்காக பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் உள்ள தந்தை பவுலின் வீட்டுக்கு தனது இரு குழந்தைகளுடன் மே 20ஆம் தேதி சென்றுள்ளார்.
அன்று மாலை பரமேஸ்வரியின் இரண்டாவது மகன் கிஸ்வந்த் (10 மாத ஆண் குழந்தை) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குளிர்பானம் என நினைத்து தவறுதலாக பெயிண்டிங் வேலைக்குப் பயன்படுத்தப்படும் தின்னரை கிஸ்வந்த் குடித்துள்ளார்.
இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் கிஸ்வந்த்தை விருதாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குளிர்பானம் என நினைத்து தின்னரை குழந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.








