தஞ்சாவூரில் நாணயங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் 10 பைசாவுக்கு ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது.
நமது முன்னோர்கள் காலத்தில் காலணா, அரையணா, 25 காசு, 50 காசு என பயன்படுத்தி அந்த காசுகள் மதிப்பு இழந்துவிட்ட நிலையில் அதனை தொடர்ந்து 1ரூ, 2ரூ என படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.2 ஆயிரம் வரை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10 பைசா கொண்டு வந்தால் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தஞ்சையில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தது.
இதையடுத்து பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் 10 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்து, சர்க்கரை வாங்கி சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு காசுகளின் மதிப்பை தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் லாப நோக்கம் எதுவும் இல்லை என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை மற்றும் புத்தாண்டை இனிப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்திலும் சர்க்கரையை வழங்கியதாக தெரிவித்தனர்.







