பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க ஆட்கள் அனுப்புவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு கிராமத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும்
திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவரிடம் 30 தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இவருக்கு ஒரிசாவில்
இருந்து தொடர்பு கொண்ட நபர் ஒருவர் போர்வெல் வேலை தெரிந்த ஆட்கள் உள்ளார்கள்
எனவும் உங்களுக்கு ஆட்கள் தேவை என்றால் அனுப்பி வைக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மூர்த்தியும் 5 நபர்களை மட்டும் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு 2000 ரூபாய் உணவுக்கு மட்டும் பணம் அனுப்புமாறு பேசிய வட மாநில கும்பலுக்கு ஆன்லைன் மூலம் 2000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி ஒரிசாவில் இருந்து ஐந்து வட மாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு புறப்பட்டு விட்டனர் எனவும் அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களையும் whatsapp மூலம் அனுப்பியுள்ளனர்.
மேலும் திருப்பூர் அருகே பேருந்து மூலம் பெருமாநல்லூர் வந்தடைந்து விட்டதாகவும் பேருந்து ஓட்டுநருக்கு நபர் ஒருவருக்கு ரூ.5000 வீதம் ரூ 18000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஆட்களை இறக்கி விடுவோம் இல்லையெனில் கேரளாவுக்கு அனுப்பி விடுவோம் என கூறியதால் மீண்டும் பணம் அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் வட மாநில கும்பல் மற்றும் ஓட்டுநரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த மூர்த்தி ரிக் உரிமையாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் இது குறித்து தகவல் பகிர்ந்துள்ளார். இதுபோன்று திருச்செங்கோடு, திருப்பூர் ,கோவை ஆகிய பகுதிகளில் 50க்கும்மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உரிமையாளர்களிடம் வடமாநில கும்பல்பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இது போன்று வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் வடமாநில கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் ஈரோடு கோவை மாவட்ட ரிக் உரிமையாளர் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் மூர்த்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
— ரெ.வீரம்மாதேவி