முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ட்விட்டரில் எழுப்பிய கேள்வி, பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் பரப்புரைக்காக அங்கு சென்ற ராகுல்காந்தி அமிர்தசரஸ் பொற்கோயிலில் வழிபாடு நடத்தினார். பிறகு ஜலந்தர் சென்ற அவர் இணைய வழி பேரணியிலும் கலந்து கொண்டார். ராகுல் காந்தி பொற்கோயிலில் வழிபாடு செய்த போது அவருடன் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் உடனிருந்தனர்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
.
ராகுல் காந்தி வழிபாடு நடத்தி இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் அகாலி தள கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்பியுமான ஹர்சிம்ரத் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
“ராகுல் காந்தியிடம் பிக்பாக்கெட் அடித்தது யார்? முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியா? ,துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ? அல்லது நவ்ஜோத் சித்துவா? ராகுலின் அருகில் செல்ல இவர்கள் மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது” என்று பதிவு செய்திருந்தார்.
ஆனால் காங்கிரஸ் இது போன்ற நிகழ்வு நடக்கவே இல்லை என்று மறுத்துள்ளது. ஹர்சிம்ரத் கவுர் ட்விட்டரை ரீட்விட் செய்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா “இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்தி அரசியல் முதிர்ச்சியோடு நடந்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். ஏற்கனேவே பிரதமர் மோடி பஞ்சாப் சென்ற போது அவரது பாதுகாப்பில் பிரச்சனை எழுந்ததாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.