பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களுல் ஒருவருமான சுஷில் குமார் மோடி மேல்சபை எம்.பியாக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மறைவையடுத்து பீகார் மாநில மேல்சபை எம்.பி பதவி காலியானதாக இருந்து வந்தது. மேல்சபை எம்.பி தேர்தலுக்காக டிசம்பர் 2ம் தேதி விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டு அன்றைய தினமே சுஷில் மோடி மனு தாக்கல் செய்தார். எதிர்கட்சிகள் யாரும் வேட்பாளரை நிறுத்தாததால் சுஷில் குமார் மோடி இன்று அதிகாரப்பூர்வ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கான வெற்றி சான்றிதழும் அளிக்கப்பட்டது.
பீகார் சட்டமன்றத்தின் எம்.எல்.ஏவாகவும், மேல்சபை உறுப்பினராகவும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர் என்ற அரிய பெருமைக்கு சொந்தக்காரராக சுஷில் மோடி மாறியிருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் புகழாரம் சூட்டினார்.
மத்திய அமைச்சராக இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான ராம்விலாஸ் பஸ்வான் மறைந்ததால் சுஷில் குமாருக்கு மத்திய அமைச்சர் அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. புதிய அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்கப்படாமல் இருப்பதும் இந்த கூற்றுக்கு வலுசேர்ப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.







