முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் படத்தில் நடித்திருந்த சாந்தினி புகார் அளித்திருந்தார். அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால், தாம் மூன்று முறை கருவுற்றதாகவும் மணிகண்டன் தம்மை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மணிகண்டன் தலைமறைவானார். பின்னர் அவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிகோரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்துள்ளது.







