தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ளும் விதமாக தொல்லியல் துறை சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் எனவும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை முறையாக ஆய்வு செய்தால் நமது வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு பின் நோக்கி செல்லும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள கிண்ணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏகநாதர் பள்ளிப்படை கோயிலில் புனரமைப்பு பணியின் போது கோயில் அருகே நிலத்தைத் தோண்டியபோது பழங்கால கல்வெட்டுகள் மற்றும் கற்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் அங்குள்ள தூண்களில் தமிழ்ப் பிராமி (தமிழி) எழுத்துக்கள் இருப்பதும் “அந்த கல்தூணில் ‘ஏகன் ஆதன் கோட்டம்’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்வெட்டு கி.மு. 1 மற்றும் 2-ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இக்கோயிலில் கி.மு ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டுக்களும் கிடைத்தது. இதனையடுத்து இக்கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளின் மூலம் இப்பகுதியில் இது போன்ற வரலாற்று சின்னங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் தொல்லியல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை தொல்லியல்துறை செய்து வருகின்றது. இந்த நிலையில் ஏகநாதர் கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் இன்று ஆய்வு செய்தார். கோவிலில் உள்ள கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் பார்வையிட்டு கோவில் வரலாறு தொடர்பான விளக்கங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜனிடம் கேட்டறிந்தார். இப்பகுதியில் ஏதேனும் கல்வெட்டுகள் கிடைத்தால் தகவல் தெரிவிக்கும்படி அங்கிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கிருபாகரன் இப்பகுதியில் தமிழின் தொன்மையை நிலைநாட்ட கூடிய இடங்கள் அதிகமாக உள்ளது என்றும் தமிழ் பிராமி எழுத்துக்களை அறிந்துகொள்ள தொல்லியல் துறை ஒரு சுற்றுலா செல்லக் கூடிய வகையில் சுற்றுலா தளத்தை ஏற்பாடு செய்தால் தமிழின் தொன்மையையும் தமிழ் கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மதுரையை சுற்றியுள்ள இடங்களில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த இடங்களையும் தொல்லியல் துறை ஆய்வு செய்து தமிழ் கலாச்சாரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேரையூர் அருகே உள்ள விஜயநகரம் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு பேரையூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தால் தொல்லியல்துறை நிச்சயம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.







