பெண்களுக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார், அப்போது, தமிழகத்தில் எந்த ஒரு ஏழை குடும்பத்திற்கும் வீடு இல்லை என்கிற நிலை இருக்க கூடாது என அதிமுக அரசு கருதுகிறது.
அதனால்தான் கான்கீரிட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 10 மாவட்ட தலை நகரங்களில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்பட்டு வருவதாகவும், இதேபோன்று நெல்லையிலும் பிரம்மாண்ட சந்தை கட்ட அரசு பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறினார். அத்துடன் பெண்களுக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.







