பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன்சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மோசமான பாதிப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் இருந்து வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் குறைந்த காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று கடந்த மாதம் முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 8,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே அதிகரிக்கும் பாதிப்புகளை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்நாட்டின் மோசமான சுகாதார கட்டமைப்பு காரணமாக மருத்துவ பணியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டின் பெஷாவரின் வடமேற்கு பகுதியில் உள்ள கொரோனா மருத்துவமனை ஒன்றில் ஆகஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைபர் டீச்சிங் என கூறப்படும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தனிவார்டில் இருந்த 5 நோயாளிகளும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இரண்டு நோயாளிகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைக்கான சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டதாகவும் இதனால் 3 மணி நேரத்துக்கும் மேலாக நோயாளிகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் அவதிக்குள்ளானதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.







