தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை, எடப்பாடி தொகுதியிலிருந்து முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்குகிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று சேலம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர், நாளை எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில் உள்ள பெருமாள் கோயில் அருகிலிருந்து தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து தயார் நிலையில் உள்ளதாகவும், ஆனால் இதற்கான உத்தரவினை பெற சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரி வராததன் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த அதிமுக கூட்டணி, தற்போதும் நீடிப்பதாக, பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.







