நான் மட்டும் முதல்வர் அல்ல தமிழக மக்கள் அனைவரும் முதல்வர்கள்தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த வாணியம்பாடியில் அம்மா மினிக் கிளினிக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலம் பொற்காலமாக திகழ்ந்ததாக தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் வழியில் தொடர்ந்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். கொரோனாவை கண்டு பயப்படாமல் மக்களை நேரில் சந்தித்து சேவையாற்றி வருவதாகவும், ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இருந்து கொண்டு தமிழக அரசை வேண்டுமென்றே திட்டமிட்டு குறைகூறி வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, முத்துநாயக்கன்பட்டியில் மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், மக்களுக்கு மருத்துவ உதவி எளிதாக கிடைக்கவே அம்மா மினி கிளினிக் தொடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு திகழ்வதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்கள் அனைவரையுமே தான் முதல்வர்களாகவே பார்ப்பதாகத் தெரிவித்தார்.







