பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜரான நடிகர் எஸ்.வி சேகர், “தான் இன்று மௌன விரதம் மேற்கொண்டிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக நடிகர் எஸ்.வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதன்படி, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்.வி சேகர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்குப் பின் பேட்டியளித்த எஸ்.வி.சேகர் தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், இனி இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, எஸ்.வி சேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது “நான் இன்று மௌன விரதம்” என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றார்.







