நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்போலா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் புதிதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து உள்ளதாவும், அதேநேரம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று கட்டுக்குள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்துக்கு இன்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகள் கவனமாக வழங்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்களும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவனை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, முழு ஓய்வில் இருக்க ரஜினிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். அப்போது, ரஜினி விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது